சென்னை: தொடக்கக் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பணி நிரவலுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்கி நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 2021-22-ம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பணி நிரவலுக்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
நடப்பாண்டிற்கான ஆசிரியர்கள் பொதுகலந்தாய்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக இருந்த பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
மேலும் தொடக்கக்கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுகான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை (பிப்.16) முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.