×

பப்ஜி மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. அவரை ஏன் வெளியில் விட வேண்டும்? : நீதிபதிகள் விளாசல்

சென்னை:தன் கணவர் மீது தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதனின் மனைவி தாக்கல் செய்த மனுவை முன்கூட்டி விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.யூடியூபில் மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற  சேனல்களை நடத்தி அதன் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் பப்ஜி மதனுக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டது. அந்த புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜூன் 18ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏராளமான புகார்கள் வந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூலை 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மதனின் மனைவி கிருத்திகா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உடல் நிலையை காரணம் காட்டி முன்கூட்டியே விசாரணை கோருகிறார். ஆனால் மதனின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளது. பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. அவரை ஏன் வெளியில் விட வேண்டும்?. குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Babji Madan , Babji, Madan, wife, filing, petition
× RELATED பப்ஜி மதன், மனைவிக்கு குற்றப்பத்திரிகை நகல் தரப்பட்டது