ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பாடம் நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள வக்கணம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை வக்கணம்பட்டி, சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 222 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென அந்த பள்ளி 3ம் வகுப்பு அறைக்கு சென்று மாணவர்களிடம் ஆங்கில மற்றும் தமிழ் பாடங்களை படிக்க வைத்தார். பின்னர் தமிழ் பாடம் நடத்தினார். மேலும் மாணவர்களிடத்தில் அவர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் கூறினர். அவர்களை கலெக்டர் பாராட்டினார்.