சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக, நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, காங்கிரஸ், அதிமுக, விசிக, மநீம, பாஜ உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், சென்னை மாநகராட்சி 176வது வார்டில் அதிமுக சார்பில், வேளச்சேரியை சேர்ந்த எம்.ஏ. மூர்த்தி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 178 வார்டில் கவுன்சிலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.இவருக்கு ஆதரவாக அக்கட்சியை சேர்ந்த ஒருசிலர் நேற்று முன்தினம் இரவு பிரசாரத்தின்போது, வேளச்சேரி சசி நகர், ஏரிக்கரை தெரு ஆகிய பகுதிகளில், வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் கொடுத்து வருவதாக, அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ஜெயலலிதா படம், இரட்டை இலை சின்னம் மற்றும் மூர்த்தி படம் போட்ட கவர், பூத் ஸ்லிப், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக, மறைத்து வைத்திருந்த ரொக்கம் ₹27, 000 ஆகியவற்றை வைத்திருந்த 2 பேரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள், அதிமுக பிரமுகர்களான வேளச்சேரியை சேர்ந்த சுகுமார்(36), வெங்கடேசன் (46) என தெரிய வந்தது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் அடங்கிய நோட்புக் மற்றும் ₹27 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் விநியோகம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூக்குத்தி கொடுத்த 2 பேரிடம் விசாரணை
அயனாவரம் பகுதியில் 96வது வார்டு அதிமுக வேட்பாளர் சுப்புலட்சுமி என்பவர், வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்தி தருவதாக தகவல் வெளியானது. அயனாவரம் போலீசார் சந்தேகத்தின் பேரில் அதிமுகவை சேர்ந்த வில்லிவாக்கம் பகுதி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பாஸ்கர் (62), மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளர் முத்து (52) ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், அவர்களிடம் இதுவரை பரிசு பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. போலீசார் வருவதை அறிந்து, மூக்குத்தி உள்ளிட்ட பரிசு பொருட்களை வேறு எங்கேனும் பதுக்கி வைத்துள்ளனரா என விசாரித்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர் ஓட்டுக்கு தங்க மூக்குத்தி பரிசு வழங்குவதை அறிந்து ஏராளமான பெண்கள் காத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.