திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கூறி நடிகர் திலீப், அவரது தம்பி அனூப், திலீப்பின் தங்கையின் கணவர் சுராஜ் உள்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் அனைவருக்கும் முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி நடிகர் திலீப் நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘‘என்மீது போலீசுக்கு ஏதோ முன்விரோதம் உள்ளது. அதனால் தான் என்னை பழி வாங்குவதற்காக போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். முன் ஜாமீன் மனு மீதான விசாரணையில், சதித்திட்டத்தை நிரூபிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே என் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறி உள்ளார்.