நெல்லை : இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்துள்ள கர்நாடக பாஜ அரசை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் மஸ்வூத் உஸ்மானி தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் சுலைமான் பிர்தவ்சி பேசுகையில், ‘‘திட்டமிட்டு மக்களை பிரிப்பதற்காக கர்நாடத்தில் நாடகம் நடத்தப்படுகிறது. பிரத்தியேக ஆடைகளை அணிவது ஒவ்வொரு சமுதாயத்திலும் இருக்கவே செய்கிறது.
சீக்கிய குழந்தைகள் தலைப்பாகை அணிவதும், ராணுவத்தில் ஜெனரல் நிலை வரை அதை தொடர்வதும் காணப்படுகிறது. கர்நாடத்தில் ஆளும் பாஜ அரசு அடுத்தாண்டு நடக்கவுள்ள தேர்தலை மையமாக கொண்டு ஓட்டுக்களை பிரிக்க இவ்வாறு செயல்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் கர்நாடகா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
மாநில செயலாளர் நெல்லை செய்யதலி, மாநில மேலாண்மை குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி, மேலாண்மை குழு உறுப்பினர் நெல்லை யூசுப்அலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்துள்ள கர்நாடக அரசையும், ஒன்றிய பாஜ அரசையும் கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.