பெங்களூரு: ஹிஜாப் சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகாவில் பள்ளிகள் இன்று முதல் தொடங்கவுள்ளன. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக சர்ச்சை வெடித்தது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பிய நிலையில், அங்கு பதற்றம் நீடித்தது. இதன் காரணமாக மாணவ -மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அளித்தது. குறிப்பாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான விவகாரத்தை பற்றியும், உடுப்பி மாவட்டத்தில் அமைதியை உறுதி செய்வதற்காகவும் எம்எல்ஏ ரகுபதி பட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட உதவுவதற்காக, பள்ளி சீருடைகள் கட்டாயமாக்கப்பட்ட பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என எம்எல்ஏ ரகுபதி தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடகாவில் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் கல்லூரிகள் திறப்பு என்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் உத்தரவின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. போராட்டங்கள் ஊர்வலம் நடத்த கூடாது, அனைத்து மாணவர்களும் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதுஇதனால் ஏற்படும் பதற்றங்களை தணிப்பதற்காக ஷிமோகாவில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது.