அந்தேரி: தந்தை வாங்கிய ரூ.21 லட்சம் கடன் வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி, அவருடைய தாயார், சகோதரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்தேரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த ஆட்டோமொபைல் ஏஜென்சி உரிமையாளர் ஒருவரிடம் நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திரா, கடந்த 2015ம் ஆண்டு ரூ.21 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த தொகையை கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வட்டியுடன் திருப்பி செலுத்துவதாக, ஆட்டோமொபைல் ஏஜென்சி உரிமையாளரிடம் சுரேந்திரா கூறியுள்ளார்.
இதற்கிடையே சுரேந்திரா கடந்த 2016 அக்டோபர் மாதம் 11ம் தேதி இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோமொபைல் ஏஜென்சி உரிமையாளர், சுரேந்திரா பெற்ற கடன் ரூ.21 லட்சம் ரொக்கம் மற்றும் 18 சத
விகித வட்டியை திருப்பிக் கொடுக்கும்படி ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் சுனந்தா ஷெட்டி, சகோதரி நடிகை ஷமீதா ஷெட்டி ஆகியோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள், கடனை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, மறைந்த சுரேந்திரா எழுதிக் கொடுத்த ஆவணத்தின் அடிப்படையில், அந்தேரி நீதிமன்றத்தில் ஆட்டோமொபைல் ஏஜென்சி உரிமையாளர் ஷில்பா உள்ளிட்ட மூவருக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷில்பா ஷெட்டி மற்றும் சுனந்தா ஷெட்டி, ஷமீதா ஷெட்டி ஆகியோர், வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.