காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்துக்குரிய வாடகை பாக்கி ரூ.4 லட்சம் தர மறுத்ததால் அக்கடையை அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் தனியார் கடைக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்தக் கடைக்கு உரிய வாடகைத் தொகை பல ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ளது. அந்தவகையில் நிலுவைத் தொகை ரூ.4,05,000 த்தை கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை கேட்டும் தர மறுத்ததால் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா மற்றும் அதிகாரிகள் அக்கடையை பூட்டி சீல் வைத்து அதை திருக்கோயில் வசம் சுவாதீனம் பெற்றனர். மேலும், இதுவரை திருக்கோயில் சொத்துக்களில் வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக செலுத்துமாறும், இது போன்ற நடவடிக்கைகளை தொடர இருப்பதாகவும் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.