புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் கடந்த 2019ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி ஸ்ரீநகருக்கு சிஆர்பிஎப் வீரர்கள் பயணம் செய்த பஸ்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். ஜம்மு காஷ்மீர் போலீஸ் கூடுதல் டிஜிபி.யாக இருக்கும் தானேஷ் ராணா, இந்த தாக்குதல் குறித்து புத்தகம் எழுதி உள்ளார்.அதில், தாக்குதல் சதி திட்டம், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள், சாட்சியங்கள் குறித்து விளக்கி உள்ளார். அவர் தனது புத்தகத்தில், ‘சம்பவத்தன்று காலை விடிந்தும் சிஆர்பிஎப் படை வீரர்கள் வாகனங்களில் புறப்பட்டனர். வழக்கத்துக்கு மாறாக 79 வாகனங்கள் அணிவகுத்து ஒன்றன் பின் ஒன்றாக சென்றன.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் பஸ் ஓட்டுனர் ஜெய்மால் சிங் என்பவரும் பரிதாபமாக பலியானார். அன்று அந்த பஸ்சை ஓட்டுவதற்கு கிர்பால் சிங் என்பவதற்குதான் பணி ஒதுக்கப்பட்டது. ஆனால், தன்னுடைய மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதால் விடுமுறை கேட்டு அவர் விண்ணப்பித்தார். இதனால், கடைசி நேரத்தில் அவருக்கு மாற்றாக ஜெய்மால் சிங் வந்து பஸ்சை ஓட்டி உயிரிழந்தார். இந்த தாக்குதலை என்ஐஏ அமைப்பு விசாரித்தது. தடயங்கள் மற்றும் இதர அறிவியல்பூர்வமான சாட்சியங்களை வைத்து பல துப்புகள் கிடைத்தன. இருந்த போதிலும், இந்த சதியில் முக்கிய மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை,’ என கூறியுள்ளார்.