கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசின் கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் மூலம் கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் வீடு கட்டும் பணியை உடனே துவக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி தலைமை வகித்தார். பிடிஓ உமாசங்கர், ஒன்றிய பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களிலும் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணியை உடனே துவக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் உடனடியாக வீடு கட்டும் பணிகளை அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் சேர்ந்து உடனடியாக துவங்க முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டின் வரைபடம் வரையப்பட்டு அதன் அளவு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறைகள்,கழிவறை வசதி உள்ளிட்டவைகள் பற்றி விளக்கி காண்பிக்கப்பட்டது.