சென்னை: நீட் விவகாரத்தில் மக்களிடம் நாடகமாடியவர் எடப்பாடி பழனிசாமி என டிடிவி.தினகரன் சாடியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் 2017ம் ஆண்டு நீட் விலக்கு கேட்டு நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களிடமிருந்து மறைத்து நாடகமாடியவர் எடப்பாடி பழனிசாமி. எனவே, அனைத்து தரப்பினரும் இப்பிரச்னையில் ஒன்றுபட்டு, தமிழ்நாட்டின் சூழலை ஒன்றிய அரசிடம் புரிய வைக்க வேண்டியது அவசியம்.
இல்லையென்றால், தமிழகத்தில் கூடுதல் மருத்துவ கல்லூரிகளை உருவாக்குதல், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டை இருமடங்காக உயர்த்துதல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை தமிழக அரசு முன்னெடுத்திட வேண்டும். இதுமட்டுமின்றி, ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதற்கு அத்தனை முனைகளிலும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.