சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் அடுத்த சனிக்கிழமை (பிப்.19) 23வது தடுப்பூசி முகாம் நடத்த இயலாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 70.42% பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இளஞ் சிறார்களுக்கான தடுப்பூசி 80.90% போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் கூறியுள்ளார். அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது வரை 21 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. இந்த நிலையில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தற்போது வாரந்தோறும் சனிக்கிழமையன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிப். 19-ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 23வது தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர் என கூறினார்.