சேலம்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளரின் கூட்டாளியின் ஜாமீன்மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்தபோது நேர்முக உதவியாளராக இருந்தவர் நடுப்பட்டி மணி. இவர் கூட்டாளி செல்வகுமாருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக நெய்வேலியை சேர்ந்த இன்ஜினியர் தமிழ்செல்வன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளர் மணி, அவரது கூட்டாளி செல்வகுமார் ஆகியோர் தமைறைவாகினர். இவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன்மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மணியையும், செல்வகுமாரையும் தனித்தனியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன்கேட்டு மணி தாக்கல் செய்த ஜாமீன்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது கூட்டாளி செல்வகுமார் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன்கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கு அரசு வழக்கறிஞர் தம்பிதுரை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து செல்வகுமாரின் ஜாமீன்மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.