கடலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன்பே சிதறி விட்டது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியையும் திமுக கூட்டணி கைப்பற்றும். அதுபோல நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் கைப்பற்றும் செல்வாக்கை மக்களிடம் பெற்றுள்ளது.
ஹிஜாப் விவகாரத்தில் சங்பரிவார் கும்பல் திட்டமிட்டு, மாணவர்களிடையே முரண்பாடுகளை உருவாக்கியுள்ளது. இது நாட்டை நாசப்படுத்துகிற முயற்சியாகும். அதனை கட்சிகள் ஒருங்கிணைந்து வன்மையாக கண்டித்து தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகத்தில் இந்து சங் பரிவார் கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் கிராமம் கிராமமாக சென்று மதகலவரத்தை தூண்டி வருகின்றனர். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சமூக நீதி படையை உருவாக்கி, கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.