×

கொந்தகை, அகரம், கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் 2 அகழாய்வு பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: கொந்தகை, அகரம், மணலூர், கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில், இரண்டு அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021-22ம் ஆண்டு ஏழு இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் - மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வு பணிகளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும். அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையை புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, பண்டை தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் (கொந்தகை, அகரம், மணலூர்), எட்டாம் கட்டம். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளையில் மூன்றாம் கட்டம். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் இரண்டாம் கட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்டம். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முதல் கட்டம். திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் முதல் கட்டம். தர்மபுரி மாவட்டம் பெரும்பாலையில் முதல் கட்டம் ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 20.1.2022 அன்று அறிவித்தார்.

15 லட்சம் ஆண்டுகள் கொண்ட இந்நிலப்பகுதியின் தொன்மை வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு அதிகளவிலான சான்றுகள் தேவை. எழுதப்படுகின்ற வரலாறானது அறிவியல் அடிப்படையிலான சான்றுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அன்று முதல் இன்று வரையிலான கால கட்டங்களில் விடுபட்டுள்ள வரலாற்றை பூர்த்தி செய்து எழுதுவதற்கு அகழாய்வுகள் செய்வது அவசியமாகும். தொடக்க வரலாற்றுக் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் இருத்ததென்றும், தென்னிந்தியாவில் காணப்படவில்லை என்னும் கருதுகோள் ஆய்வாளர்களிடம் இருந்தது. கீழடி அகழாய்வானது கங்கைச் சமவெளியில் நிலவியது போன்ற நகர நாகரிகம் மட்டுமின்றி படிப்பறிவும் எழுத்தறிவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலே நிலவியது என்பதை நிலை நிறுத்தியுள்ளது.

ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய தொன்மை வாய்ந்த ஊர்களை பெற்றுள்ள தண் பொருநை ஆற்றங்கரை (தாமிரபரணி) நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற உமி நீங்கிய நெல்மணிகளின் வழிப் பெறப்பட்ட காலக் கணக்கீடு நிலை நிறுத்தியுள்ளது.அத்தகைய எண்ணங்களையும் நோக்கங்களையும் நிறைவு செய்வதற்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையானது ஏற்கனவே அகழாய்வுகளை மேற்கொண்டு வரும் கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மட்டுமின்றி புதிதாக திருநெல்வேலி மாவட்டம் - துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை மற்றும் தர்மபுரி மாவட்டம் - பெரும்பாலை ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்நிதியாண்டியில்
₹5 கோடி நிதியில் மேற்படி ஏழு தொல்லியல் அகழாய்வுகள், இரண்டு களஆய்வுகள் மற்றும் சங்ககால கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண முன்களப் புல ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், சிவகங்கை மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, அரியலூர் மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.அன்று முதல் இன்று வரையிலான கால கட்டங்களில் விடுபட்டுள்ள வரலாற்றை பூர்த்தி செய்து எழுதுவதற்கு அகழாய்வுகள் செய்வது அவசியமாகும்

Tags : Chief Minister ,Kondagai ,Agaram ,Gangaikondacholapuram , 7 places including Kontagai, Agaram, Gangaikondacholapuram 2 The Chief Minister initiated the excavation work
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...