திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோயில் மாசி திருவிழாவில் நேற்று சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா வந்தனர்.
அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று 4ம் திருவிழாவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இருந்து மாலை 6.30 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி குமரவிடங்கபெருமானும், வெள்ளி சரப வாகனத்தில் தெய்வானை அம்பாள் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர்.
இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயில் சேர்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.