×

அரியானா மாநிலம் குருகிராமில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து!: 2 பேர் பலி..இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்..!!

சண்டிகர்: அரியானா மாநிலம் குருகிராமில் அடுக்குமாடி குடியிருப்பில் 6வது மாடியில் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குருகிராமில் செக்டார் 109 பகுதியில் சின்டெல்ஸ் பாரடைசோ அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 17 தளம் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 530 வீடுகள் உள்ளன. 420 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் குடியிருப்பின் 6வது தளத்தில் செய்யப்பட்ட ரிப்பேர் பணி காரணமாக விரிசல் ஏற்பட்டு தளம் இடிந்தது. அதனை அடுத்து கீழே உள்ள 4 தளங்களும் ஆட்டம் காண தொடங்கின. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக தளங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால் 12 பேர் கட்டிடத்திற்குள்ளேயே சிக்கியதாகவும், இருவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கட்டிடத்தில் இருந்து ஏராளமானவர்கள் ஒரேநேரத்தில் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடம் இடிந்து விழுகிறது என்று தகவல் பரவியதால் சுற்றுவட்டாரத்தில் குடியிருக்கும் மக்கள் திரண்டதால் பரபரப்பு காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அடுக்குமாடி கட்டிடம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளை கண்காணித்து வருவதாக அரியானா முதல்வர் கட்டார் தெரிவித்துள்ளார்.


Tags : Gurugram, Haryana , Haryana, Gurugram, apartment building, accident
× RELATED சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் அழகி:...