சண்டிகர்: சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார் நடிகர் சோனு சூட்.கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடங்கியது முதல், பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் சோனு சூட். இந்நிலையில் பஞ்சாபில் நடைபெற உள்ள தேர்தலில் மோகா மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் சோனு சூட்டின் சகோதரி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சண்டிகரிலிருந்து மோகாவுக்கு காரில் நேற்று முன்தினம் இரவு சென்றுகொண்டிருந்தார் சோனு சூட்.
அப்போது, வழியில் ஒரு கார் சேதமாகி கிடந்ததை பார்த்தார். அதில் இருந்த நபர், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே தனது காரை நிறுத்திய சோனு சூட், அந்த காரை நோக்கி ஓடினார். அந்த நபரை தனது தோளில் சுமத்திக் கொண்டு, தனது காரில் ஏற்றினார். பிறகு அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்றார். காயம் அடைந்த அந்த நபரை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க செய்தார். இப்போது அந்த நபர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.