திருச்சி: சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்? என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணியை தேசிய அணுமின் கழகம் தொடங்கியதற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது. சேமிக்கும் ஆலைக்கழிவை கையாள்வதற்கு தொழில்நுட்பம் இல்லை என அமைச்சர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டார். இந்தியாவுக்கு ஆழ்நில அணுக்கழிவு மையம் இப்போதைக்கு தேவையில்லை என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது. இந்தியாவில் அணுக்கழிவு மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது என்பதை ஒன்றிய அரசு இன்னும் முடிவு செய்யாமல் இருந்தது. ஒன்றிய அரசு முடிவே செய்யாத நிலையில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் வேலை தொடங்கப்பட்டுள்ளது.
நிரந்தரமாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்க உலக நாடுகளே திணறி வருகின்றன. ஆழ்நில அணுக்கழிவு மையத்துக்கான இடத்தை கூட தேர்வு செய்யாத நிலையில் கூடங்குளத்தில் அணுக்கழிவை சேமிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கூடங்குளத்தில் ஆழ்நில அணுக்கழிவுகளை சேமித்து வைக்க முயல்வது எந்த வகையில் நியாயம்? என்று பூவுலகின் நண்பர்கள் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் வேலைகளை செய்வது தமிழ்நாடு அரசு, மக்களை அவமதிக்கும் செயலாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்? எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வினவியுள்ளனர்.