×

பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசிய விவகாரம்: நீட் தேர்வு தொடர்பான ஆத்திரத்தில் வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

சென்னை: தி.நகர் பகுதியிலுள்ள பா.ஜ.க.தலைமை அலுவலகத்தில பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கொளுத்தி வீசிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது. நீட் தேர்வு தொடர்பான பா.ஜ.க.வின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சென்னை, தி.நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று (10.02.2022) அதிகாலை சுமார் 01.20 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொளுத்தி வீசியுள்ளார். இது குறித்து தகவலறிந்து R-1 மாம்பலம் காவல் நிலைய காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், அதில் பதிவான எதிரியின் அடையாளத்தை வைத்து விசாரணை செய்ததில் பழைய குற்றவாளி வினோத் (எ) கருக்கா வினோத் என்பவர் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்பேரில் காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் (எ) கருக்கா வினோத், 38, பெற்றோர்-மணி மற்றும் மாரியம்மாள், S.M.நகர், நந்தனம், சென்னை என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் எதிரி வினோத் (எ) கருக்கா வினோத் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது தெரியவந்துள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் இவர் மத ரீதியாகவோ, அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும், இவர் இவ்வாறு பொது பிரச்சனையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில் வினோத் (எ) கருக்கா வினோத், E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளதும், ஏற்கனவே 2015ம் ஆண்டு R-1 மாம்பலம் காவல் நிலைய எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியதும், 2017ம் ஆண்டு E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய வாசலில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியுள்ளதும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பின்னர் எதிரி வினோத் (எ) கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


Tags : BJP In the office, petrol bomb, NEET selection, investigation
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...