×

கீழ்ப்பாக்கம் பகுதியில் சோகம் அரசு மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

சென்னை: படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் மனமுடைந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வரதராசு (52). இவர், சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சக்திபிரியா (20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.  

வழக்கமாக படிப்பில் சக்திபிரியா முதலிடத்தில் இருந்து வந்ததாகவும், சில மாதங்களாக படிப்பில் கவனம் செல்லுத்த முடியாமல் பின்தங்கியதால் அவர் மன அழுத்ததில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறி வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிறகு அவரது பெற்றோர் அவரை மீட்டு ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வரதராசு தனது மனைவியுடன் துணி எடுக்க வண்ணாரப்பேட்டைக்கு சென்றுள்ளார்.

பிறகு இரவு வீட்டிற்கு வந்து பலமுறை கதவை தட்டியும் மகள் சக்திபிரியா கதவை திறக்கவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த வரதராசு வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மகள் புடவையில் தூக்கில் தொங்குவது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் வீட்டின் கதவை உடைத்து மகளை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்படி கே.கே.நகர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kilpauk ,Government Medical College , Government Medical College student commits suicide by hanging in Kilpauk area
× RELATED அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...