சென்னை: சென்னை, மாவட்ட தேர்தல் அதிகாரி, ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5794 வாக்குச்சாவடிகள் உள்ளன.
சென்னை மாநகராட்சியின் http://election.chennaicorporation.gov.in என்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இணையதளத்தில் Know your Zone and Division என்ற இணைப்பில் மண்டலங்கள் மற்றும் வார்டுகளின் அமைவிடங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் Know your Polling Station என்ற இணைப்பை கிளிக் செய்யும்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதள இணைப்பில் மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், வாக்காளர் பெயர், உள்ளாட்சி அமைப்பு, வார்டு எண், தெருவின் பெயர், வாக்குச்சாவடி விவரம், வாக்காளர் பட்டியலின் பாகம் எண் மற்றும் வரிசை எண் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.