×

புதுகை அருகே பரபரப்பு; பள்ளி சென்ற மாணவன் திடீர் சாவு: உறவினர்கள் போராட்டம்

ஆலங்குடி:  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதியை சேர்ந்தவர் நாடிமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மகன் நித்தீஸ்குமார்(9). இவர் பாப்பான் விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன், உணவு இடைவேளைக்குப்பின் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் கழிவறைக்கு சென்றார். பின்னர் வகுப்பறை திரும்பியபோது மயக்கம் வருவதாக ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்க மாணவனின் தந்தையை செல்போன் மூலம் ஆசிரியர் தொடர்பு கொண்டார். அப்போது நாடிமுத்து தானும், மனைவியும் வேலைக்கு சென்றுள்ளதால் பிள்ளையை வீட்டில் விடுமாறு கேட்டுக் கொண்டதால் மாணவனை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டில் சென்று ஆசிரியர் விட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் மாணவனை ஆலங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நித்தீஸ்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் நித்திஸ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள்  பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆலங்குடி போலீசார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவனின் உறவினர்கள் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில், மாணவனின் திடீர் சாவுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகே மாணவனின் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Budugai , Agitation near Budugai; Sudden death of a student who went to school: Relatives struggle
× RELATED புதுகை மாவட்டத்தில் நகர்ப்புற...