திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 2வது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை, கணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதுதொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த வேடியப்பனூர் அருகே உள்ள கொல்லக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை(49), விவசாயி. இவரது முதல் மனைவி கலா, 2வது மனைவி சுதா. சுதாவிற்கும், திருவண்ணாமலை அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்த ஹாஜிபாஷா(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதையறிந்த சின்னதுரை, சுதாவை கண்டித்துள்ளார். ஆனால் சுதா கள்ளக்காதலை கைவிடவில்லையாம். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெரியபாலியப்பட்டு கிராமம் அருகே சுதாவும், ஹாஜிபாஷாவும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்களாம். இதையறிந்த சின்னதுரை, இவரது நண்பர் சத்யமூர்த்தி ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த மணி(46) என்பவரிடம் நாட்டுத்துப்பாக்கி வாங்கிக்கொண்டு பெரியபாலியப்பட்டு கிராமத்திற்கு சென்றனர். அங்கு தனிமையில் இருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.
இதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஹாஜிபாஷாவை கண்டித்துள்ளனர். இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விவசாயி சின்னதுரை தான் எடுத்துவந்த நாட்டு துப்பாக்கியால் ஹாஜிபாஷாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதை பார்த்த சின்னதுரை, சத்யமூர்த்தி ஆகியோர் தப்பியோடி விட்டார்கள். இதையடுத்து பொதுமக்கள் படுகாயம் அடைந்த ஹாஜிபாஷாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஹாஜிபாஷா திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சின்னதுரை, சத்யமூர்த்தி மற்றும் நாட்டு துப்பாக்கி கொடுத்த மணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் நாட்டுதுப்பாக்கியை பறிமுதல் செய்தனர். 2வது மனைவியின் கள்ளக்காதலனை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.