திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தூதரகத்தில் அதிகாரியாக பணிபுரிந்த சொப்னா உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சொப்னாவுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கரும் கைது செய்யப்பட்டார். கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சுங்க இலாகா, மத்திய அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ ஆகியவை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முதல் நபராக கருதப்படும் தங்கராணி சொப்னா, ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உள்பட சிலர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் சொப்னாவிடம் மீண்டும் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. அதன்படி நாளை கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து நாளை சொப்னா விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.