யாவுண்டே: ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான 33வது ஆப்ரிக்க கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி காம்ரூனில் நடந்தது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை யாவுண்டே நகரில் நடந்தது. அதில் எகிப்து-செனகல் நாடுகள் மோதின. இரு அணிகளும் கோப்பையை வெல்ல வேகம் காட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
செனகல் சில நேரங்களில் கூடுதல் வேகம் காட்டி, கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. அதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோலடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது.அதன் பிறகு வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் யாரும் கோல் அடிக்கவில்லை.
எனவே ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் கோலடிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்ட தலா 5 வாய்ப்புகளில் எகிப்து 2 வாய்ப்புகளை மட்டுமே கோலாக மாற்றியது. ஆனால் செனகல் 4 வாய்ப்புகளை கோலாக்கியது. அதனால் செனகல் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று முதல்முறையாக ஆப்ரிக்க கோப்பையை முத்தமிட்டது.
கூடவே கோப்பையை வெல்ல வேண்டும் என்ற செனகல் மக்களின் 60 ஆண்டு கனவும் நனவானது. அதனால் செனகல் ரசிகர்கள் இரவு பகலாக தொடர்ந்து கொண்டாடட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து 2வது இடத்தையும், முன்னாள் சாம்பியன் காம்ரூன் 3வது இடத்தையும், புர்கினோ ஃபசோ 4வது இடத்தையும் பிடித்தன