சென்னை: கால்நடை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 31 பேருக்கு உள் ஒதுக்கீட்டில் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில், இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு 408 இடங்கள் உள்ளன. அதைப்போன்று உணவு, கோழியின, பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 96 இடங்கள் உள்ளன. இந்த படிப்பில் பொது பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்பில் திருப்பூர் ஊத்துக்குளியை சேர்ந்த பிரியா என்ற மாணவி முதலிடமும், தருமபுரி திருமால்வாடியை சேர்ந்த பவித்ரா இரண்டாம் இடமும், நாமக்கல் வெண்ணந்தூரை சேர்ந்த தீபாகுமார் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் இந்த பட்டியலில் 2,719 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 31 பேருக்கு உள் ஒதுக்கீட்டில் இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் கவுன்சிலிங் குறித்த அறிவிப்புகள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.