×

சேலம்-உளுந்தூர்பேட்டை இடையிலான 8 இடத்தில் உள்ள புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வலியுறுத்தல்: அடிக்கடி விபத்து நடப்பதால் எதிர்பார்ப்பு

சேலம்: சேலம்-உளுந்தூர்பேட்டை இடையே உள்ள 8 புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சேலம்-உளுந்தூர்பேட்டை இரு வழிச்சாலையாக இருந்தது. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தால், இச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வந்தது. வாகன விபத்துக்களை குறைக்க நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், போக்குவரத்து ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் அமைப்பினர் ஒன்றிய அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த ஒன்றிய அரசு கடந்த 2008ம் ஆண்டு சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அதே ஆண்டில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதில் சீலநாயக்கன்பட்டியில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை 136 கிலோமீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்றது. இப்பணி 5 ஆண்டுகளாக தொடர்ந்து  நடந்து, 2013ம் ஆண்டு நிறைவு பெற்றது.

இச்சாலையில் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய எட்டு இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலைகள் அனைத்தும் அப்போதைய வாகனங்களின் எண்ணிக்கையை பொருத்து இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டது. இச்சாலையில் மேட்டுப்பட்டி, நத்தக்கரை, மாடூர் ஆகிய 3 இடங்களில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாகியும் இன்னும் 8 இடங்கள் இரு வழிச்சாலையாக இருக்கிறது. அதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு சென்னையில் இருந்து சேலம் வழியாக திருப்பூருக்கு அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் வாழப்பாடி அருகேயுள்ள புதுப்பாளையம் புறவழிச்சாலையில் வரும்போது பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். இதுபோன்ற விபத்துக்கள் இனிமேல் நடக்காமல் இருக்க இரு வழிச்சாலைகளாக புழிச்சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது: சேலம்-உளுந்தூர்பேட்டை ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், மதுரை, தர்மபுரி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களை இணைக்கும் இடமாக உள்ளது. இதனால் இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இரு வழிச்சாலையாக இருந்த சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை மாற்றப்பட்டு ஒன்பது ஆண்டுகளாகிறது. இச்சாலையில் 8 இடங்களில் புறவழிச்சாலைகள் உள்ளன. 4 வழிச்சாலையாக மாற்றும்போது, இந்த புறவழிச்சாலைகளில் தேவையான நிலங்கள் கையக்கப்படுத்தப்பட்டது. இந்த இடங்களில் சிறு நீரோடை பாலங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் தொடங்கும் சாலை உடையாப்பட்டி பவர்ஹவுஸ் வரை 4 வழிச்சாலையாக உள்ளது. அங்கிருந்து ஏழாவது மைல் வரை இருவழிச்சாலையாக உள்ளது. எப்போதும் 4 வழிச்சாலையில் வரும் வாகனங்கள் 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். அதே வேகத்தில் இருவழிச்சாலையில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. ஓர் ஆண்டுக்கு சராசரியாக 60 முதல் 80 விபத்துக்கள் புறவழிச்சாலையில் நடக்கிறது. இதைதவிர சிறு, சிறு விபத்துக்களும் நடந்து வருகிறது. இந்த புறவழிச்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க ஒரு சில இடங்களில் சாலை நடுவே தடுப்புக்கட்டைகளும், ஒரு சில இடங்களில் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் செல்லும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த புறவழிச்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.

இந்த வகையில் நேற்று சென்னையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசு விரைவு பஸ் வாழப்பாடி புறவழிச்சாலையில் தான் விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலத்தில் இருந்தும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் இருந்து தொழில் நிமிர்த்தமாக சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையை சென்னைக்கு அதிகம் பேர் செல்கின்றனர். எதிர்வரும் நாட்களில் விபத்துக்களை தவிர்க்க எட்டு புறவழிச்சாலைகள் அனைத்தும் 4 வழிச்சாலையாக மாற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாகன ஓட்டிகள் கூறினர்.

Tags : Salem ,Ulundurpet , 8-lane bypass between Salem-Ulundurpet Insistence to change to 4 lanes: anticipation of frequent accidents
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...