விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திப்பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள சிவனை வழிப்பட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் இக்கோயிலில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்பம்சத்தை கொண்ட கோயிலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகள் கழித்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 8.15 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. கோயில் உள்ளே நுழைவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்தனர்.
மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோயில் வெளிப்பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக வாழும் கலை மைய நிறுவனர் ரவிசங்கர் குருஜி பெங்களூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெய்வேலி வந்திறங்கி அங்கிருந்து கோயிலுக்கு காரில் வந்து சாமி தரிசனம் செய்தார்.