திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரீஷ் (58). பிரபல மனநல மருத்துவர். பல டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளார். கடந்த 2017ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் படிப்பில் கவனக்குறைவாக இருந்துள்ளான்.
இதனால், பெற்றோர் தங்கள் மகனை டாக்டர் கிரீஷிடம் அழைத்து சென்றனர். அப்போது, மாணவனை மட்டும் டாக்டர் அறைக்குள் அழைத்து சென்றார். அப்போது மாணவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மிரட்டி ஓரின சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டி உள்ளார். இந்நிலையில், மாணவனின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டதை கண்டு பெற்றோர் அவனிடம் விசாரித்தனர்.
அப்போதுதான், டாக்டரின் நடவடிக்கைகள் வெளிவந்தது. இது பற்றி திருவனந்தபுரம் போர்ட் போலீசில் பெற்றோர் புகாரளித்தனர். போலீசார் டாக்டர் கிரீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயகிருஷ்ணன், டாக்டர் கிரீசுக்கு 6 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
* டாக்டர் கிரீஷ் மீது ஏற்கனவே சிகிச்சைக்கு வந்த ஒரு மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், திருமணமான ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும் புகார்கள் உள்ளன.