×

அரசு பஸ் சேவை தொடங்கியது திருமலை - ஸ்ரீவாரி பாதம் செல்வதற்கு ரூ.55 கட்டணம்

திருமலை: திருமலையில் இருந்து ஸ்ரீவாரி பாதம் செல்வதற்கு நேற்று முதல் அரசு பஸ் சேவை தொடங்கியது. இதற்கு ₹55 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், திருமலையில் உள்ள பாபவிநாச தீர்த்தம், அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்திரியில் உள்ள அஞ்சனாதேவி-பால ஆஞ்சநேயர் சுவாமி கோயில், ஆகாச கங்கை, ஜாபாலி ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள நாராயணகிரி மலை உச்சியில் உள்ள வாரி பாதம் செல்வதற்கு அரசு பஸ் போக்குவரத்து வசதி இல்லை. இதனால், பக்தர்கள் தனியார் ஜீப், கார்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முதன் முறையாக நாராயணகிரி மலை உச்சியில் உள்ள வாரி பாதத்தை பக்தர்கள் தரிசிக்கும் விதமாக பஸ் சேவை தொடங்க முடிவு செய்தது. அதன்படி, பஸ் சேவை நேற்று முதல் தொடங்கியது. இந்த பஸ் அனுபவமுள்ள டிரைவர்களை கொண்டு இயக்கப்படுகிறது. திருமலையில் இருந்து வாரி பாதம், சிலாதோரணம் (இயற்கை கற்பாறை வளைவு) ஆகியவற்றை பார்வையிட ₹55 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே டிக்கெட்டில் அரசு பஸ்சில் சென்று திருமலையில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களையும் காணும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக திருமலை அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

Tags : Government bus service started Thirumalai - Sreevari foot fare Rs 55
× RELATED காந்தி நகரில் போட்டியிடும் அமித்...