புதுடெல்லி: டெல்லி வரும் இலங்கை வெளியுறவுதுறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கை அரசு எரிபொருள் வாங்குவதற்கு, இந்தியா சமீபத்தில் ரூ.3,700 கோடி கடன் உதவி வழங்கி உள்ளது. இந்நிலையில், இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதுகுறித்து வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘இன்று டெல்லி வரும் இலங்கை அமைச்சர் பெய்ரிஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் வர்த்தகம் மற்றும் முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதில், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்த பேச்சும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையில் அங்கு வாழும் தமிழர்களுக்கு சமத்துவம் வழங்கும் வகையில், அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கோரிக்கை விடுக்கும். மேலும் வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷவர்த்தன் ஷிரிங்லாவும் பெய்ரிசை சந்தித்து பேச உள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 தமிழக மீனவர்கள் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.