சென்னை: கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டில் நடைபெற இருக்கின்ற கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தமிழக மீனவர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். இந்தியர்களும் கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பங்கேற்க விரும்புகிறார்கள். இந்திய- இலங்கை நாடுகளின் நல்லுறவின் அடிப்படையில், வருங்கால வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் வகையில் நடப்பு ஆண்டில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் இந்தியர்களும் பங்கேற்க வேண்டும். எனவே ஒன்றிய அரசு, இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்களும் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.