சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: வருகிற 19ம் தேதி நகர்ப்புற அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று, 22ம் தேதி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதிமுகவுடன் பாஜக கூட்டணி இல்லை. ‘நாங்கள் தனியே நிற்கப் போகிறோம்‘ என்பது வரவேற்கத்தக்கதே. உள்ளாட்சியை நல்லாட்சியாக தொடர தமிழ் நாட்டு மக்கள் திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் வரும் 19ம் தேதி அன்று நடைபெறும் தேர்தலில் பேராதரவு தரும் வகையில் வாக்களிப்பது, ஊர் நலம் பெருக பெரிதும் உதவிடும்.
வரலாறு படைத்து வரும் நம் முதலமைச்சரின் ஆட்சியை மேலும் வலுப்படுத்த இத்தேர்தலை ஒரு நல்லவாய்ப்பாகக் கொண்டு வாக்களிக்க வேண்டும். வாக்குறுதிகளை செயல் மலர்களாக்கும் பொருளாதார நீதி அடங்கிய சமூகநீதி ஆட்சி எமது ஆட்சி - ‘அனைவருக்கும் அனைத்தும்‘என்ற கோட்பாடுதான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு-அது ஊராட்சியிலிருந்தே தொடங்க இந்த வாய்ப்பை நழுவ விடாமல் ஆட்சியைப் பலப்படுத்தி, உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர ஆளும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது-ஜனநாயகம்-மக்களாட்சி மேலும் வலுப்படுத்திட கிடைத்துள்ள வாய்ப்பு - நழுவ விடாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.