×

ராகுல் திருமணம் செய்து கொண்டால் நாங்கள் ‘மேக்கப்’ போடுகிறோம்: பிரியங்காவிடம் விருப்பம் தெரிவித்த அழகு நிலைய உரிமையாளர்

அலிகார்: ராகுல் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு நாங்கள் மேக்கப் போடுகிறோம் என்று அலிகாரில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்காவிடம் அழகு நிலைய உரிமையாளர் விருப்பம் தெரிவித்தார். உத்தரபிரதேச தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்றிரவு அலிகாரில் உள்ள ரயில்வே சாலை மார்க்கெட்டில் நடந்து சென்றவாறு மக்களிடம் வாக்கு சேகரித்தார். வணிகர்கள் மற்றும் பெண் தொழிலதிபர்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்பகுதியில் செயல்படும் அழகு நிலையத்திற்குள் திடீரென நுழைந்த பிரியங்கா காந்தி, அங்கிருந்த ஊழியர்களுடன் சுமார் 10 நிமிடங்கள் உரையாடினார். அழகு நிலையத்தின் உரிமையாளர் தீபாலி அரோரா, பிரியங்கா காந்தியிடம் மேக்கப் போட்டுக் கொள்ளச் சொன்னார். அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, தான் அழகு நிலையத்திற்கு சென்றதில்லை என்று அவரிடம் கூறினார். பிரியங்காவின் இந்த பதிலை கேட்டு, அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தீபாலி அரோரா கூறுகையில், ‘பிரியங்கா காந்தி எங்களது அழகு நிலையத்திற்கு வந்தது, எங்களுக்கு பெருமையாக உள்ளது. அவர், அழகு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கொரோனா காலத்தில் தொழில்கள் எப்படி நடக்கிறது என்று கேட்டார். அரசிடம் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கிறதா? என்று கேட்டார். ராகுல்காந்தி திருமணம் செய்து கொண்டால், அவருக்கு நாங்கள் மேக்கப் போட தயாராக இருக்கிறோம்; அவரை அலிகாருக்கு அழைத்து வாருங்கள் என்று கூறினோம்.

அதற்கு பிரியங்கா காந்தி சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினார்’ என்றார். தொடர்ந்து சாலைகளில் நடந்து கொண்டே பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி, சில கடைகளுக்குள் சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் காரில் ஏறிச் சென்ற பிரியங்கா, அவ்வப்போது காரில் இருந்து கீழே இறங்கிச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதனால், சில இடங்களில் அவரது பாதுகாப்பு பணியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே சிரமங்கள் ஏற்பட்டன.

Tags : Raql ,Priyanga , If Rahul gets married we put on ‘makeup’: the owner of the beauty salon who expressed his wish to Priyanka
× RELATED வாரணாசியில் மோடிக்கு எதிராக...