சென்னை: தலைமைக்கும், பதவிக்கும் கட்சிக்கு வரவில்லை; தமிழகத்துக்காக வந்துள்ளேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இதற்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 26ம் தேதி அறிவித்தது. அதில் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி பிப்ரவரி 4ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் போட்டியிட 14,701 வேட்புமனுக்கள், 138 நகராட்சிகளில் உள்ள 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 23,354 வேட்புமனுக்கள், 490 பேரூராட்சிகளில் உள்ள 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 36,361 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள 1,644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. அனைத்து இடங்களிலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் வேட்புமனு பரிசீலனை அமைதியாக முடிந்தது.
வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை (7ம் தேதி) மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் தமிழகம் முழுவதும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னமும் நாளை மாலையே வெளியிடப்படும். திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
சிலர் வீடுவீடாக சென்று ஓட்டு வேட்டையை துவக்கி உள்ளனர். கட்சி தலைவர்களும் விரைவில் பிரசாரத்தை துவக்க உள்ளனர். இந்நிலையில் சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; தலைமைக்கும், பதவிக்கும் கட்சிக்கு வரவில்லை; தமிழகத்துக்காக வந்துள்ளேன். ரூ. 1 சம்பளம் என்று கூறிவிட்டு ஊரையே கொள்ளையடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நம்மால், மலம் அள்ளும் என் தம்பிகளுக்கு ஒரு இயந்திரம் கண்டுபிடிக்க முடியாதா?. ஆட்சியை பிடிக்க எல்லோருக்கும் ஆசை தான்; காட்சியை மாற்றுவோம். முதலில் குடுமியை பிடிக்க வேண்டும்; பிறகு ஆட்சியை பிடிக்க வேண்டும்.
கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்? ஒன்றிய அரசின் ஏஜெண்டாக ஆளுநர் தன கடமையை செய்கிறார். நீட் விலக்கு விவகாரத்தில் மத்திய அரசு சொல்வதை ஆளுநர் கேட்கிறார் என விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர்; நாம் தலைவர்களை தேடக்கூடாது; சமூக சேவகர்களைத் தேட வேண்டும் எனவும் கூறினார்.