வேலூர்: வேலூர் மாநகராட்சியில் பெண்கள் வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்த அமமுக வேட்பாளர் மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு மொத்தம் 1,147 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 60 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் மட்டும் 505 பேர் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்ட 41வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ஏழுமலை என்பவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக உதவி தேர்தல் அலுவலர் பிரபு ஜோசப்குமார் கூறுகையில், ‘‘41வது வார்டில் போட்டியிட மனுதாக்கல் செய்த அமமுக வேட்பாளர் ஏழுமலையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 41வது வார்டு பெண்கள் வார்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது’’ என்றார்.