சென்னை: அடியாட்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ள சசிகலா புஷ்பா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு ஜீவன் பீமாநகர் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்.பி சசிகலாபுஷ்பா(44). இவர் தற்போது பாஜவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது 2வது கணவர் ராமசாமி(46). இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த மாதம் 26ம் தேதி இவர் சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கிற்காக ஆஜராகிவிட்டு, சென்னையில் உள்ள என் வீட்டிற்கு வந்தேன். அப்போது கதவை திறந்தபோது, அடியாட்களை போன்று காணப்பட்ட அமுதா மற்றும் என் வீட்டில் தங்கி இருந்த ராஜா ஆகியோர், எனது மனைவி சசிகலா புஷ்பா தூண்டுதலின்பேரில், என்னை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
புகாரை வாங்கிய போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி அதிமுக முன்னாள் எம்.பி.யும் தற்போது பாஜவில் உள்ளவருமான சசிகலா புஷ்பா, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா , விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அமுதா ஆகிய 3 பேர் மீது நேற்று கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உட்பட 341, 323 , 506 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்