×

போலீஸ் அதிகாரிகளை எப்படி கொல்வது?: நடிகர் திலீப் பேசிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீசாரை எப்படிக் கொல்வது என்று நடிகர் திலீப் பேசும் ஆடியோ வெளியானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பிரபல நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜு பவுலோஸ் உட்பட போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப், அவரது தம்பி உள்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி திலீப் உள்பட 5 பேர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த இரு வாரங்களாக இந்த மனு மீது உயர் நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்று வந்தது. இறுதியில் இந்த முன் ஜாமீன் மனுக்கள் மீது நாளை (7ம் தேதி) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கோபிநாத் கூறியுள்ளார்.

போலீஸ் அதிகாரிகளை கொல்ல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டினார் என்று அவரது நண்பரும், டைரக்டருமான பாலச்சந்திர குமார்  கூறினார். இவரது தகவலின் பேரில் தான் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் திலீப் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக திலீப் உள்பட சிலர் பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாகவும் பாலச்சந்திர குமார் கூறினார். அவரிடமிருந்த ஆவணங்களை போலீசார் சேகரித்தனர். மேலும், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் பாலச்சந்திர குமார் ரகசிய வாக்குமூலமும் அளித்தார்.

இந்நிலையில், போலீஸ் அதிகாரிகளை எப்படி கொல்ல வேண்டும் என்று திலீப் பேசும் ஆடியோவை பாலச்சந்திர குமார் வெளியிட்டுள்ளார். ஒருவரை கொல்ல வேண்டுமென்றால் அந்த நபர் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும்போது கொல்ல வேண்டும். அப்போதுதான், அவரை யார் கொன்றார்கள் என போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது. நம்மையும் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்று திலீப் தனது தம்பியிடம் பேசுவது அந்த ஆடியோவில் உள்ளது. நாளை முன் ஜாமீன் மனுக்கள் மீது உத்தரவு வரவுள்ள நிலையில் திலீப் பேசியுள்ள இந்த ஆடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாலச்சந்திர குமார் கூறுகையில், ‘‘இந்த ஆடியோவை ஏற்கனவே போலீசிலும், நீதிமன்றத்திலும் ஒப்படைத்து விட்டேன். திலீப் பேசும் மேலும் பல ஆடியோக்கள் என்னிடம் உள்ளன. அதில் போலீஸ் அதிகாரிகளை எந்த முறையில் கொல்ல வேண்டும் என்று அவர் பேசுவதும் உள்ளது. அதையும் விரைவில் வெளியிடுவேன்,’’ என்றார்.

பாலச்சந்திர குமார் மீது இளம்பெண் பாலியல் புகார்: நடிகர் திலீப் மீது புகார் கொடுத்த டைரக்டர் பாலச்சந்திர குமார் மீது, இளம்பெண் ஒருவர் போலீசில் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். இது, அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூரை சேர்ந்த அந்த இளம்பெண், வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னுடைய பிளாட்டுக்கு வரவழைத்து, பாலச்சந்திர குமார்  தன்னை பலாத்காரம் செய்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Dilip , How to kill police officers ?: Excitement over release of audio of actor Dilip speaking
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...