புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அனைத்தையும் வேண்டுமென்றே கேரள அரசு மிகைப்படுத்தி தெரிவிக்கிறது,’ என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணை இயக்க முறை, புதிய தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து வழிமுறைகளையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். அணை மதகுகளை திறப்பது தொடர்பான அட்டவணையை தயார் செய்து அதனையும் வெளியிட வேண்டும். நீர் கசிவு, அதன் வரவை கண்காணிக்கும் தொழில்நுட்பம், அதேபோன்று நீர்வரத்தை முன் அறிவிப்பு செய்யக்கூடிய தொழில்நுட்பம், பெரு வெள்ளப்பெருக்கை கண்டறிந்து முன்னெச்சரிக்கை விடுக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உடனடியாக நிறுவ வேண்டும். ஆனால், இந்த பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு முட்டுக்கட்டையாக கேரள அரசு இருந்து வருகிறது. எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள ஒத்துழைக்கவில்லை.
குறிப்பாக, பேபி அணை பராமரிப்பு தொடர்பாக 23 மரங்களை வெட்ட வேண்டும். ஆனால், அது குறித்து கேரளா அரசு எந்த கவலையும் படாமல் அதற்கு தற்போது வரையில் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதேப்போன்று, அணையை பலப்படுத்தும் பணியை கேரள அரசு தொடர்ந்து நடத்த விடாமல் கால தாமதம் செய்து வந்தால், இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். கேரள அரசு தான் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அனைத்தையும் மிகைப்படுத்தி தெரிவிக்கிறது. அதில் உன்மை தன்மை கிடையாது என்பதால் அதுசார்ந்த அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.