×

பூந்தமல்லி அருகே விபத்து அரசு பஸ் மீது வேன் மோதி 3 பேர் படுகாயம்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே அரசு பஸ் மீது வேன் பயங்கரமாக மோதியதில் வேன் டிரைவர் உட்பட 3 பேர் பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே உள்ள  நூம்பல் பகுதியில் தனியார் ஷூ தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் இருந்து வேலை முடித்த பெண்களை வேனில் ஏற்றிக்கொண்டு கூடுவாஞ்சேரி நோக்கி ஒரு வேன் நேற்று சென்று கொண்டிருந்தது. வேனை டிரைவர் தீனதயாளன் (40) ஓட்டினார். அவரது அருகில் சுந்தர் (36), தேவதாஸ் (36) ஆகிய ஊழியர்களும் பின் பகுதியில் 15க்கும் மேற்பட்ட பெண்களும் அமர்ந்திருந்தனர்.

 பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம் சிக்னல் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது சாலையில் மாடுகள் கடந்து சென்றதால் முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டது. அதன் பின்னால் ஆற்காடு நோக்கி சென்ற அரசு பஸ்சும் திடீரென பிரேக் போட்டது. இதனால் பஸ்சின் பின்னால் வந்துகொண்டிருந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து, பஸ்சின் பின்பகுதியில் பலமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி முழுவதுமாக அப்பளம் போல் நொறுங்கியது. இதில், வேன் டிரைவர் மற்றும் முன்னால் அமர்ந்திருந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்களும் காயமடைந்தனர்.

இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டனர். 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்தவர்களை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இதில் டிரைவர் தீனதயாளன், சுரேந்தர், தேவதாஸ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்  விசாரித்து வருகின்றனர்.



Tags : Poonamallee , Accident near Poonamallee On the government bus 3 injured in van collision
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...