வாஷிங்டன்: பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி அல் குரோஷி நேற்றிரவு கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தனர். இவர்களது திட்டம், ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி, துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றை இணைத்து தனி முஸ்லிம் நாட்டை உருவாக்குவதாகும். இதன் முதல்கட்டமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றினர். பின்னர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை துரத்தி விட்டு முஸ்லிம் அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.
மொசூல் நகரில் ஆட்சி பீடமாக அமைத்து தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்றும் சுருக்கி கொண்டனர். சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் சில பகுதிகள், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இதன் தலைவராக இருந்து வந்தவர் ஈராக்கை சேர்ந்த அபுபக்கர் அல் பாக்தாதி. இவரை கடந்த 2019ல் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் உத்தரவின் இதே அமெரிக்க துருப்பு படைகள் கொன்றது. அவரின் மரணத்துக்கு பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றவர் தான் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி அல் குரோஷி. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் மற்ற ஜிஹாதிகளால் மிகவும் மதிக்கப்பட்டுவந்த ஒரு தலைவர் அல் குரோஷி.
இவரை அந்த அமைப்பினர் ‘அறிஞர்’ என்றும் ‘போர்களின் அரசன்’ என்றும் அழைத்து வந்துள்ளனர். இவர் இதற்கு முன்பே, அமெரிக்கா படைகளுடன் நடந்த சண்டைகள் பலவற்றில் பங்கேற்ற நபர் என்பதால், அமெரிக்க ராணுவம் குறித்து அதிகமாக அறிந்த நபர் என்றும் இவரை சொல்கின்றனர். ஐஎஸ்ஐஎஸ் சட்ட திட்டத்தின் நீதிபதிகளில் ஒருவரான இவர், அல் பாக்தாதி இறப்புக்கு முன் பொதுவெளிகளில் அதிகம் அறியப்படாதவர். மேலும் அல் பாக்தாதி இறப்புக்கு பிறகு அவரின் வலதுகரம் போல இருந்த அப்துல்லா கரதாஷ் என்பவர் ஐஎஸ்ஐஎஸ் புதிய தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருக்கும் அதிகம் அறிமுகம் இல்லாத அபு இப்ராஹிம் அல் ஹாசிமி அல் குரோஷி தலைவரானார். தலைவரானதுமே தன்னுடைய அதிரடியை தொடங்கினார்.
பொறுப்பேற்ற அன்றே அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை, “அவர் கோட்டிக்கார கிழவன்” என்று வம்பிழுத்ததோடு, “அல் பாக்தாதியை கொன்று விட்டதாக மகிழ்ச்சி கொள்ள வேண்டாம். இதற்கு நாங்கள் பழிவாங்குவோம்” என்று சபதமிட்டார். இந்நிலையில், நேற்றிரவு அல் குரோஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் டிவிட்டரில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட பதிவில், ‘நேற்றிரவு எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க ராணுவ படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. நமது ஆயுத படைகளின் துணிச்சலுக்கு நன்றி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷியை கொன்றுள்ளோம்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவின் எல்லை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை வெளிக்கொணரும் திறனுக்கு ஒரு சான்றாகும். பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க உறுதியாக உள்ளேன். இந்த நாட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க படையினரின் தாக்குதல் நடவடிக்கையின்போது ஐ.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியை போலவே அபு இப்ராஹிம் அல் ஹாசிமி அல் குரோஷியும் வெடிகுண்டை வெடிக்க செய்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 6 சிறுவர்கள், 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அபு இப்ராஹிம் அல் ஹாசிமி அல் குரோஷியின் உடல் வெடித்து சிதறியதாகவும் தெரிகிறது.
ஐ.எஸ். அமைப்பை உருவாக்கிய அபு பக்கர் அல்-பாக்தாதியை சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அமெரிக்க படையினர் கடந்த 2019ம் ஆண்டு சுற்றிவளைத்தபோது, அவர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து, அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரோஷி, தற்போது அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையின்போது குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த சூழலில் அமைப்பின் தலைவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.