அகமதாபாத்: வெஸ்ட்இண்டீசில் நடந்து வரும் யு 19 உலக கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல்வியே கண்டிராத இந்திய அணி 5வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. இதனிடையே யு19 வீரர்களை ஜூம் காலில் விராட் கோஹ்லி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வீரர்களை அவர் உற்சாகப்படுத்தி ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
இதுபற்றி இன்ஸ்டாகிராமில் ஆல்ரவுண்டர் ஹங்கர்கேகர் “உங்களுடன் உரையாடியது மிகவும் நன்றாக இருந்தது. உங்களிடமிருந்து வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் பற்றிய சில முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், இது வரவிருக்கும் காலங்களில் நாங்கள் சிறந்து விளங்க உதவும்” என பதிவிட்டுள்ளார். 2008ம்ஆண்டு மலேசியாவில் நடந்த யு19 உலக கோப்பை இறுதி போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.