சென்னை: பப்ஜி மதனுக்கு சிறையில் சகல வசதிகளை செய்து கொடுக்க, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியானது. முதற்கட்டமாக கூகுள் பே மூலமாக ரூ.25 ஆயிரம் அனுப்பிய தகவலும் வெளியாகி உள்ளது. எனவே வௌியான ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து சிறைத்துறை டிஜிபி விசாரணை நடத்தி வருகிறார். தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி யூ-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ததுடன், அதில் சிறுமிகள் மற்றும் பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் பேசி வந்த யூ-டியூபர் பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் குவிந்தன.
இதனடிப்படையில் பப்ஜி மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதனின் மனைவி கிருத்திகா ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கிருத்திகா ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பப்ஜி மதனுக்கு சிறையில் சகல வசதிகளை செய்து கொடுக்க அவரது மனைவியிடம் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி சிறை அதிகாரிகளுடன் மற்றும் பணியில் உள்ள காவலர்கள், ஆய்வாளர்கள், சிறை வார்டன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.