×

தந்தையை தாக்கியவர்களுக்கு சரமாரி அடிஉதை: மகன், மருமகன் கைது

குன்றத்தூர்: மாங்காட்டில் தந்தையை அடித்து காயப்படுத்தியவர்களை சரமாரியாக தாக்கிய மகன், மருமகன் கைது செய்யப்பட்டுள்ளனர். மாங்காடு, சீனிவாச நகரை பகுதியை சேர்ந்தவர் முருகன் (49). சென்னை அண்ணாசாலையில் உள்ள ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் ஊழியராக பணி புரிகிறார். நேற்று முன்தினம் இரவு முருகன், வேலை முடிந்து மெபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். மாங்காடு, நெல்லித்தோப்பு மெயின் ரோட்டில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் (45), சற்குணன் (45) ஆகியோர் சிமென்ட் மூலம் வேகத்தடை அமைத்து கொண்டிருந்தனர். அதை கவனிக்காமல் சென்ற முருகன், வேகத்தடை மீது மெபட்டை ஏற்றி இறக்கினார். இதனால், வேகத்தடை சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமார், சற்குணம் ஆகியோர், முருகனிடம் தகராறு செய்தனர். அதில் வாக்குவாதம் முற்றி, இருவரும் சேர்ந்து முருகனை சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த முருகன், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து மாங்காடு போலீசில், முருகன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமார் (45), சற்குணம் (45) ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர். அதன் பேரில் அவர்கள், காவல் நிலையம் சென்று கொண்டிருந்தபோது, முருகனின் மகன் ஜெசுரன் (20), மருமகன் விக்கி (27) ஆகியோர், 2 பேரையும் வழிமறித்து, அவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின்படி மாங்காடு போலீசார், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெசுரன், மருமகன் விக்கி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Tags : Volley , Volley of assailants for attacking father: son, nephew arrested
× RELATED நாகை அருகே நடுக்கடலில் நள்ளிரவில்...