சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோயிலில் புதிய சண்டிகேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோயிலில், தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் சிலை 3 ஆண்டுகளுக்கு முன்பு கழுத்து பகுதியில் சேதமடைந்தது. இதனால் பூஜைகள் நடக்காமல் இருந்தது. சேதமடைந்த சிலையை மாற்றி புதிய சிலையை நிறுவ பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மயிலாடி பகுதியில் புதிய சிலை செய்யப்பட்டு, கடந்த 21ம் தேதி தாணுமாலயன் சாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. புதிய சிலைக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் புதிய சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக மணலிக்கரை மட ஸ்தானிகர் சஜித் சங்கரநாராயணரு தலைமையில் தெற்கு மண் மட ஸ்தானிகர் திலீப், வட்டபள்ளி மட ஸ்தானிகர் டாக்டர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று சண்டிகேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு கும்ப அபிஷேகம், ெதாடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.