×

முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் சீட் கேட்டு தர்ணா: சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு

சென்னை: தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் மறுக்கப்படுவதாக கூறி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் நேற்று மாலை முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுடனான இடபங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இதில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் போட்டியிட காங்கிரசார் பலர் முட்டி மோதி வருகின்றனர். மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில தலைவரிடம் சீட் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் கவுன்சிலரான பி.வி.தமிழ்செல்வன் 92வது வார்டில் வாய்ப்பு கேட்டு மனு செய்திருந்தார். அவர், தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி நேற்று மாலை திடீரென சத்தியமூர்த்தி பவனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் அங்குள்ள காமராஜர் சிலையின் கீழே ஒரு போர்டுடன் அமர்ந்து, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சிக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வரும் எனக்கு இந்த தேர்தலில் கட்சி தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என கூறி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Congress ,Dharna ,Sathyamoorthy Bhavan , Former Congress councilor seeks seat in Dharna: Sathyamoorthy Bhavan
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்