×

'கட்சி மாறினால் வெட்டுவேன்..அதிலும் என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும்'என பேசி அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர்: அதிமுகவில் போட்டியின்றி வெற்றிபெற்று கட்சி மாறினால் வெட்டுவேன் என பேசி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 9-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. அதாவது அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்று கட்சி மாறினால் அவரை வீடு புகுந்து வெட்டுவேன் என எச்சரித்தார்.  

அதையடுத்து பேசிய அவர், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். அதிலும் என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும் என்று கடுமையாக பேசினார். இது சொந்த கட்சி உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தற்போது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.


Tags : 'If the party changes, I will cut it. My cut will be the first cut,' he said and filed a case against the AIADMK leader
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...