சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதற்காக, திமுக மாவட்ட செயலாளர்களுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மாநிலம் முழுவதும் மதிமுக மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சு நடத்தினர். அதன் பயனாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மதிமுகவுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் மதிமுக சார்பில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில் சென்னையில் மட்டும் 137வது வார்டு, 80வது வார்டு மற்றும் திருவான்மியூர், ஆர்கே.நகர் பகுதிகளில் தலா ஒரு வார்டு உட்பட 4 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களுடனான பேச்சுவார்த்தையின் முடிவில் மதிமுக சார்பில் ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்பட்டது. இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.